கோவில்பட்டியான் :
அதலைக்காய், சிறுகிழங்கு, தீக்குச்சி, கடலைமிட்டாய் எங்கள் கரிசல் மண்ணின் அடையாள வாசனைகள்.இதேபோல சின்ன வயதில் இருந்தே அம்மாவின் வியர்வை படிந்த ஜாக்கெட்டின் வாசனை,ரூபாய் தாளின் வாசனை, வேட்டை நாய் மேல் வரும் வாசனை, ஆட்டுக் கொட்டாரங்களில் புலுக்கையின் வாசனை, சாணிகளை கரைத்து மொழுகிய வீட்டு முற்றத்தின் வாசனை, பஜாரில் காபிக்கொட்டைகளை வறுக்கும் வாசனை, மஞ்சள், மல்லித்தலை மற்றும் மிளகாய் வற்றல் போன்றவை ரைஸ் மில்லில் அரைபடும் போது வரும் வாசனை, புதுத்துணியின் வாசனை, இவைகளுக்குள்தான் எப்பொழுதும் என் ஆன்மா சுழன்று கொண்டே இருக்கும்.
பக்கங்களை திருப்பினால் அப்பளம் போல் உடையும் பழைய புத்தகத்தின் வாசனை ரொம்ப பிடிக்கும். இப்படியாக எல்லாமும் வாசனையாக உழன்று நினைவுகளாக இருந்தபோது,மறக்கமுடியாத நினைவுகளை என் வாழ்வில் உருவாக்கியது பழைய புத்தக கடைதான்.
வடக்கே கிருஷ்ணர் கோவில்,
தெற்கே செண்பகவல்லியம்மன் கோவில், மேற்கே பழைய பேருந்து நிலையம், கிழக்கே ரயில் நிலையம் இணையும் நாற்சந்தியில் ( நான்கு சாலை இணையும் இடத்தில்) கிருஷ்ணர் கோவில் போகும் வழியில் அந்த பழைய புத்தக கடை இருக்கும். புத்தகபுதையலை கிழிந்த தார்பாய் மற்றும் அழுக்கு படிந்த கட்- அவுட்களால் மூடியிருப்பார். இடப்பக்கம் வகிடு எடுத்து வலபக்கமாக தலைமூடியை சீவி , மீன்தூண்டில் நரம்பு போல உடல்வாகு, கட்டம் போட்ட சட்டை, அர்ணாக்கொடி அவரின் இடுப்பையும் காக்கிப்பேண்டையும் தாங்கி நிற்கும். ஒரேயோரு இரும்புபெட்டி . அதில் புத்தகங்களையும் பெயர் தெரியாத கோட்டர்பாட்டிலில் கால்வாசி மதுவும் இருக்கும். அந்த கடையில் தான் ச.தமிழ்செல்வன் புத்தகங்கள் வாங்குவார். நானும் அங்கு கல்யாண்ஜீ கவிதைகள், விகடன் நாளிதழ், ராஜு முருகனின் வட்டியும் முதலும் , முருகபூபதியின் சூர்பனகை , புத்தகங்களை வாங்கினேன். இவைகளுடன் அட்டைபடம் இல்லாமல் நைத்த பக்கங்களுடன் அதன் வாசனையுடனும் உலாவும் புத்தக புழு நான்.
Comments
Post a Comment